திருவில்லிபுத்தூர் அருகே, லஞ்சம் வாங்கிய ஊராட்சி தலைவர் கைது; ஊராட்சி நிர்வாகத்தை துணைத்தலைவர் கவனிக்க எதிர்ப்பு தெரிவித்து, ஊர் மக்கள் சாலை மறியல். - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 27 June 2023

திருவில்லிபுத்தூர் அருகே, லஞ்சம் வாங்கிய ஊராட்சி தலைவர் கைது; ஊராட்சி நிர்வாகத்தை துணைத்தலைவர் கவனிக்க எதிர்ப்பு தெரிவித்து, ஊர் மக்கள் சாலை மறியல்.


திருவில்லிபுத்தூர் அருகே ஊராட்சி நிர்வாகத்தை துணைத்தலைவர் கவனிக்க எதிர்ப்பு தெரிவித்தும், வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி நிர்வாகத்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியும், ஊர் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள வெம்பக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட, கீழராஜகுலராமன் பகுதியைச் சேர்ந்தவர் பொன் பாபாபாண்டியன் (50). இவரது மனைவி ரூபாராணி (45). பொன் பாபாபாண்டியன் விவசாயம் செய்து வருகிறார். இவர் தனது மனைவி ரூபாராணி பெயரில் வீடு கட்டுவதற்காக வரைபட அனுமதி கேட்டு கீழராஜகுலராமன் ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுத்தார்.


அதற்கு ஊராட்சி தலைவர் காளிமுத்து (70), வரைபட அனுமதி வழங்குவதற்கு 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து பொன் பாபாபாண்டியன் விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரைப்படி ரசாயனம் பூசிய 6 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது ஊராட்சி தலைவர் காளிமுத்துவை, லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன், ஆய்வாளர்கள் சால்வன்துரை, பூமிநாதன் மற்றும் போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். 


லஞ்சம் வாங்கி ஊராட்சி தலைவர் கைதான நிலையில் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். கீழராஜகுலராமன் ஊராட்சி நிர்வாகத்தை கவனிக்கும் பொறுப்பு துணைத்தலைவர் குருவையா மற்றும் எழுத்தர் கருத்தப்பாண்டியன் இருவருக்கும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் கீழராஜகுலராமன் ஊராட்சி நிர்வாகத்தை கவனிக்கும் பொறுப்பை துணைத்தலைவர் மற்றும் எழுத்தருக்கு கொடுக்கப்பட்டதை கண்டித்தும், ஊராட்சி நிர்வாகத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் கவனிக்க வலியுறுத்தியும், கீழராஜகுலராமன் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டவர்கள் இன்று காலை திரண்டு வந்து ராஜபாளையம் - வெம்பக்கோட்டை சாலையில் அமரந்து சாலை மறயலில் ஈடுபட்டு வருகின்றனர். 


காலை நேரத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருவதால், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டம் நடந்து வருவதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்த, வெம்பக்கோட்டை வட்டாட்சியர் ராமநாதன், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டு வரும் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad