அருப்புக்கோட்டையில், மின்னல் தாக்கி வாலிபர் பரிதாப உயிரிழப்பு. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 13 June 2023

அருப்புக்கோட்டையில், மின்னல் தாக்கி வாலிபர் பரிதாப உயிரிழப்பு.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள பண்ணைமூன்றடைப்பு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (25). இவர், அருப்புக்கோட்டையில் உள்ள விளம்பர பதாகைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் கம்யூட்டர் வடிவமைப்பாளராக வேலை பார்த்து வந்தார். மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் நேற்று மாலை, அருப்புக்கோட்டை புறவழிச்சாலை அருகேயுள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். 

அப்போது அந்தப் பகுதியில் பலத்த காற்று வீசியதுடன், இடி மின்னலுடன் லேசான சாரல் மழை பெய்யத் துவங்கியது. கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த மணிகண்டன் உள்ளிட்டவர்கள் மழையில் நனையாமல் இருப்பதற்காக மைதானத்திலிருந்து வெளியேறி ஓடி வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மணிகண்டன் மீது பலத்த மின்னல் தாக்கியது. இதில் அவர் அங்கேயே சுருண்டு விழுந்தார். உடனடியாக அவரது நண்பர்கள் மணிகண்டனை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மணிகண்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். 


மின்னல் தாக்கி தங்களது நண்பர் மணிகண்டன் இறந்ததைக் கேட்ட அவரது நண்பர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இது குறித்து தகவலறிந்த அருப்புக்கோட்டை நகர் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம், அந்தப் பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad